×

வயதான தம்பதியரை தாக்கி கொள்ளையடிக்க முயற்சி

சேந்தமங்கலம், மே 3: புதுச்சத்திரம் அருகே வீட்டில் தனியாக இருந்த வயதான தம்பதியரை தாக்கி, கத்திமுனையில் நகை கொள்ளையடிக்க முயன்ற 2 வாலிபர்களை, போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்து உள்ள பெருமாள் கோயில்மேடு பகுதியைச் சேர்ந்தவர் பெரியண்ணன்(77), விவசாயி. இவரது மனைவி வாங்கலாயி(70). இவர்களின் மகன், மகள் திருமணமாகி வெளியூரில் உள்ளனர். நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், பெருமாள் கோயில்மேடு பஸ் ஸ்டாப் அருகே தனியார் பெட்ரோல் பங்க் பக்கத்தில் உள்ள தனது தோட்டத்து வீட்டில், தம்பதி இருவரும் வசித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில், வீட்டிற்கு வந்த கொள்ளையர்கள் 2 பேர், வீட்டின் வெளிப்பகுதியில் கட்டிலில் படுத்திருந்த பெரியண்ணனின் கையில் கத்தியால் வெட்டி பணம், நகைகளை எடுத்து வந்து தருமாறு கேட்டு மிரட்டியுள்ளனர். வலி தாங்க முடியாமல் பெரியண்ணன் சத்தம் போடவே, வீட்டின் உள்ளே படுத்திருந்த அவரது மனைவி வாங்கலாயி எழுந்து வந்துள்ளார். அவரையும் தாக்கிய வாலிபர்கள், வீட்டுக்குள் உள்ள பணம், நகையை எடுத்து வரும்படி கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். வயதான தம்பதியரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதை பார்த்த 2 கொள்ளையர்களும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

இதுகுறித்து பெரியண்ணன் புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கோமதி வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது சேந்தமங்கலம் அடுத்துள்ள கல்குறிச்சியைச் சேர்ந்த பெரியசாமி மகன் அஜித்(24), அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பெரியசாமியின் மகன் தென்னரசு (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் இருவர் மீதும், பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

The post வயதான தம்பதியரை தாக்கி கொள்ளையடிக்க முயற்சி appeared first on Dinakaran.

Tags : Senthamangalam ,Puduchattaram ,Kathimuna ,Periyannan ,Perumal Koilmedu ,Puduchattaram, Namakkal district ,
× RELATED தீவன தட்டுப்பாட்டால் புதன்சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரிப்பு